ஏதேனும் ஒரு நாளையேனும்...

ஏதேனும் ஒரு நாளையேனும்
எனதாய் எடுத்தாளவேண்டும்

உருண்டு கிடக்கும்
எண்ணப் பந்துகளை
உதைத்தாடி
முடிவு குறித்தான
திட்டமிடுதல்களற்று
முனைந்து பார்க்க வேண்டும்
ஒரு முறையேனும்

தாழிடப்பட்ட
இமைகளுக்குள்ளிருந்து
கண்களை விடுவிக்கவும்

தேவைகளின் சுமை கருதி
இயக்கிய உறுப்புகளை
அதன் பொருட்டில் இயங்கவிட்டு
அழகு பார்க்கவும்

இதய துடிப்பின்
தாளலயத்தில்
மூச்சு பாடலொன்றை
முழுமையாய் ரசிக்கவும்

ஏதேனும் ஒரு நாளையேனும்
எனதாய் எடுத்தாளவேண்டும்

மேலும்
எப்போதும் சுமந்து திரியும்
சில சிலுவைகளை
இறக்கி வைத்து
உயிர்த்தெழ வேண்டும்
ஒரு நாளையேனும்...


இதழ் இயல்

முத்தங்களை சேமித்து வைக்கும்
உண்டியலிருந்தால்
உன் முத்தங்களை சேமித்து வைத்து
நீ இல்லாத நாட்களில்
செலவு செய்து கொள்வேன்
ஆனால் அப்படி ஒரு
உண்டியல் இல்லையே...
சரி பரவாயில்லை
நீதான் ஊருக்கு போகையில்
பிரியும் நாட்களுக்கும் சேர்த்தே
கொடுத்து விட்டு போகிறாயே ...


இனிமேல்,
என்னை அருகில் வைத்துக்கொண்டு
எந்த குழந்தைக்கும் முத்தமிடாதே...
அது குழந்தை என்பதைகூட மறந்துவிட்டு
எதிரியாய் பார்க்கிறேன்


முத்தம் கேட்கும் போதெல்லாம்
மாட்டேன் என்கிறாயே
எதற்கு
நான் கெஞ்சவேண்டும் என்றா...
இல்லை கொஞ்சவேண்டும் என்றா...
ஒருவேளை நான்,
முத்தங்களே கேட்கவில்லையென்றால்
நீ முத்தங்களை வைத்துக்கொண்டு
என்னசெய்ய போகிறாய்...

அந்த கடலையோ மழையையோ
குடித்து விடவா
என்னசெய்ய சொல்
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம்
காயும்முன்
ஏதாவது செய்ய வேண்டும்.


உனக்கு எப்போது
பரிசு கொடுப்பதென்றாலும்
நான் முத்தங்களையே
பரிசாய் தருகிறேன்
உன் காதலுக்கு பதிலாய்
என் காதலையே கொடுப்பதை விட
வேறென்ன பெரிதாய்
என்னால் தந்துவிட முடியும்.

கடந்தகாலத்தை தவிர

எத்தனை வலியிலும்
நகர்கிறது வாழ்க்கை

முந்தைய வலிகளையும்
நேற்றைய கண்ணீரையும்
இன்றைய புன்னகை
எப்படியோ
மறைத்து விடுகிறது

அடுத்த வேளை உணவுக்கும்
நிச்சயமற்ற வாழ்வில்
நாளைய விழிப்பென்பதும்
கேள்விக்குறியே !

உண்பதும் உறங்குவதுமாய்
கழியும் காலத்தில்
எதை பதிவு செய்தோம்
கடந்த காலத்தை தவிர...

இருந்தும் எதற்கோ
இந்த வாழ்க்கை
எதை நோக்கியோ
நகர்ந்துகொண்டு...

ஒற்றை வரியேனும்...

ஒற்றை வரிகூட
எழுவதில்லை...
ஊருக்கு சென்ற பின்

அதிகாலை தரும்
அம்மாவின் தேநீர்
அலுப்புகளையும் சுகமாக்கி
எழுப்புகிறது

பிரிவு செய்திகளை
பிரியமுடன் கேட்கும் அப்பா
இறக்கி விடுகிறார்
நீண்ட நாளைய கனங்களையும்

சுவர்களுக்குள் அடைபடாத
காலைக்கடன்கள்
ஆற்று மீன்களோடு
ஆனந்தமாய் நீந்துகிறது

திசையெங்கும்
அறிந்த முகங்களின்
அன்பு தழுவலில்
அடைப்புகள் உடைபட்டு
அருவியாய் பெருகுகிறது
அன்பு வெள்ளம்

நகரத்து வறுமையும்
தனிமையின் சூன்யமும்
கிராமத்து மயானத்திலும்
காணக் கிடைப்பதில்லை

விடுமுறை திர்ந்தபின்
விடியும் முன் கிளம்பி
அம்மாவின் அறிவுரைகளோடு
பேருந்தின் இருக்கைபிடித்து
உறக்கத்தோடே அமர்ந்தாலும்

உள்ளிருந்து எழுகிறது
ஒற்றை வரியேனும்...

எச்சரிக்கையாய் இரு

எனதாய் இல்லை
என் வாழ்வின்
எந்த நொடியும்...

ஏதோவொரு முகமூடிக்குள்
எப்போதும் நான்

ஒரு கைதேர்ந்த
நடிகனைப்போல்
எல்லா சுழலிலும்
என்பங்கை மிகச்சரியாய்
பூர்த்தி செய்கிறேன்

உள்ளுக்குள்
துரத்தி கொண்டே இருக்கிறது
காரணமற்ற ஏதோவொரு பயம்

யாருமற்ற தனிமைகளில்
என்னோடு பேசும்
என் சுயம் சொல்கிறது...

எச்சரிக்கையாய் இரு
"இங்கு
உன்னைப்போல் பலர் உண்டு !"

உயரங்களை பழகுகிறேன்...

புதிதாய் பறக்க
கற்றுக் கொள்ளும்
குஞ்சு பறவையின்
சிறகுகளோடு மெல்ல
சிறகடித்து பழகுகிறேன்...
வாழ்க்கையை

சரிவுகளில் எளிதாய்
பயணப்படும் சிறகுகள்
உயரங்களில் மட்டும்
கேலிக்குள்ளாகிறது

மெல்ல
கிளைவிட்டு கிளைதாவி
உயரங்களை பழகுகிறேன்

ஒருபோதும்
என்சிறகுகள்
ஓய்ந்து போவதில்லை...

நாளை வானையே
அளக்கும் சிறகுகள்
நம் வசமாகலாம்
என்ற நம்பிக்கையோடு!

அன்று
புள்ளியாய்கூட போகலாம்
கேலிசெய்த உயரங்கள்.

உணர்ச்சி


(தென்னகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டு "உணர்ச்சி" என்னும் தலைப்பில் நான் வாசித்த, சிறந்த கவிதைக்கான முதல் பரிசை பெற்ற கவிதை...)

இல்லாத ஒன்றை ஏனோ
இன்றைக்கு தலைப்பாய் தந்தீர்
தலைப்பிலாவது இருக்கட்டுமென்று
தலைவா நீ நினைத்திரோ!

உணர்ச்சி என்ற எங்கள் மூச்சை
என்றைக்கோ நிறுத்தி விட்டோம்
இன்றைக்கு இருப்பதெல்லாம்
நடமாடும் பிணங்கள்தான்

செத்து மடியும்
பிணங்கள் பார்த்தே
சொரணையின்றி
சோத்தை உண்போம்

பணத்தை கொஞ்சம்
அதிகம் தந்தால்
தாயைகூட மனைவி என்போம்

அன்னையவள் முலையறுத்தே
அன்னியவன் நடந்தாலும்
அறிக்கைதான்
நாங்கள் விடுவோம்

உணர்ச்சியாவது
மண்ணாவது...

காசுக்கு எதையும் தின்னும்
வாக்காளர் எங்கள் மக்கள்...
பதவிக்கு கட்சி மாறும்
தலைகளே எங்கள் தலைகள்...

தேசத்தை அடகு வைத்தும்
தேவையானால்
வாங்கி தின்போம்
தேர்தலை கண்டால் மட்டும்
எங்கிருந்தோ
உணர்ச்சி கொள்வோம்

ஆட்சியை பிடிக்கும் வரை
ஆத்திரம்கூட அதிகம் வரும்
ஆட்சியை பிடித்து விட்டால்
மூத்திரம்கூட வருவதில்லை

வெள்ளையனின் வேரறுக்க
வீறு கொண்டதெங்கள் உணர்ச்சி...
சுதந்திரத்தை பெற்ற பின்னே
சுதந்திரமாய் தூங்குகிறது

உணர்ச்சி இன்று
எவர்க்கும் இல்லை
உணர்ச்சி இன்று
எதற்கும் இல்லை

எந்த தலை பேசினாலும்
எதற்கும் கைகள் தட்டி வைப்போம்
எங்கு கூட்டம் கூடினாலும்
நூறில் ஒன்றாய்
அங்கும் நிற்போம்

எவன் செத்தால்
எனக்கென்ன
என் தலை உள்ளதென்போம்
பேச்சிக்கு மட்டும்தான்
எங்கள் ரத்தம்
என்று சொல்வோம்

இல்லாத ஒன்றை ஏனோ
இன்றைக்கு தலைப்பாய் தந்தீர்
தலைப்பிலாவது இருக்கட்டுமென்று
தலைவா நீ நினைத்திரோ!

வாய்ப்புக்கு நன்றி...
வருத்தங்களோடு இனியவன்.

அம்மா

அத்தனை தெய்வங்களையும்
துணைக்கழைத்து
அப்பாவை வழியனுப்புவாள்

எதோ முனுமுனுத்தவாறே
வீட்டுக்குள் நுழையுமவள்
இருக்கும் உணவை
எல்லோருக்கும் கொடுத்து விட்டு
இன்றெனக்கு பசிஇல்லை என்பாள்

பின் அரிசியில்
கல் பொறுக்கியவாறே
உமிகளோடு சேர்த்து
உறவுகளையும் தூற்றுவாள்

மதியம் வெயில் என்றும் பாராமல்
காட்டில் விறகு பொறுக்கி
கருத்துபோய் வீடு வருவாள்

மாலைநேரம் ஆகிவிட்டால்
வாசலில்
வீதி பார்த்து அமர்வாள்

வாடிய முகத்தோடு
வீடுவரும் அப்பாவிடம்
காலையில் எதிர் வந்த
எவளோ ஒருத்தியை
சபித்து கொண்டிருப்பாள்.

ஒவ்வொரு மாலையும்
அப்பா வீடு திரும்பிய பின்
ஏற்றப்படும் உலையில்
கொதித்து கொண்டிருப்பாள்...

வருமானமற்ற
அன்றைய நாளின்
தவிப்போடு!

சுதந்திரம்

(நான்கு வருடம்களுக்கு முன்பு சுதந்திரம் என்னும் தலைப்பில் நான் எழுதிய கவிதை )

எங்கள் குடிசைகளுக்குள்
குணமுண்டு பணமில்லை

எங்கள் குடல்களுக்குள்
பசியுண்டு உணவில்லை

எங்கள் இரவுகளில்
நிலவு பாட்டியுண்டு
வடைதானில்லை

நட்சத்திரங்கள்
எங்கள் வீட்டு கூரையின்
போத்தல்கள்

சுதந்திர தினங்கள்
எங்கள் பிள்ளைகளின்
நாக்கடியில் மிட்டாய்கள்

இரவில் வாங்கினார்களாம்
எங்களுக்கு தெரியாது
உரிமை கொடுத்தார்களாம்
எங்களுக்கு கிடையாது

முதுகெலும்பு வளைந்தாலும்
முப்பது ரூபாய்தான்
வேர்வை வழிந்தாலும்
இருபது ரூபாய்தான்
பாதகங்கள் தேய்ந்தாலும்
பத்து ரூபாய்தான்

கேட்டாலும் கிடைக்காது
எடுத்தவன் உயிர் இருக்காது

இறக்கி வைத்தோம்
மாடிகளை
தாடிகள்தான்
எங்கள் சொத்து

உழுது விளைத்தோம்
உணவுகளை
பட்டினிதான்
எங்கள் சொத்து

நெய்து கொடுத்தோம்
ஆடைகளை
கிழிசல்கள்தான்
எங்கள் சொத்து

சுதந்திர வாசம்
இங்கு இல்லை
சாக்கடை நாற்றங்க்களே
நாங்கள் அறிவோம்

சுதந்திர மெத்தை
இங்கு இல்லை
சாணித் தரைகளே
எங்கள் கனவு

கல்வி கொள்ள ஆசைதான்
காசு பணம் இல்லையே
நெல்லுச்சோறு கனவுதான்
நேரம் அமையவில்லையே

இருட்டில் வாங்கியதை
பிரித்து கொண்டார்கள்
எங்களுக்கு தெரியாமல்
சுதந்திரம் என்பதை
காதில் சொன்னார்கள்
கண்ணில் காட்டாமல்

எழ நினைத்தோம்
காலில் அடி
உரிமை கேட்டோம்
உடலில் ரத்தம்
அழ நினைத்தோம்
கண்ணீர்த்துளி ...

சுதந்திரம் கிடைத்தது
"சத்தமில்லாமல் அழ"...
விடுமுறைகள் கூட
சுமையாகி விட்டது ...
உன்னை காதலிக்க துவங்கிய பின்.


என்னிடத்தில் இருக்கும்போது
குழந்தையாகவும்
எவராவது வந்து விட்டால்
குமரியாகவும்
மாறிவிடுகிற வித்தையை
எங்கு கற்றாய் நீ ?
நீ என்னை அடிப்பது
எனக்கு வலிப்பதற்க்காகவா
இல்லை,
என்னை தொடுவதற்க்ககவா...
எப்போதும் சிரித்து கொண்டே அடிக்கிறாயே
அடிப்பவர் சிரித்துகொண்டா அடிப்பார் ?
அந்த பூங்காவின் புல்தரை மீது
ஆசையாய் நடந்து போகிறாய் ,
பூங்காக் காவலன் ஓடிவந்து
அதன்மேல் நடக்காதிர்கள்
புல் நசுங்கி விடும் என்கிறான்...
மடையன் ,
அவனுக்கென்ன தெரியும்
அன்று உன் பாதங்கள் நசுங்கியது .
உனக்காக நான் எதையும் செய்வேன்
என்றாலும் ,
எதைநான் செய்வது ...
எதை செய்தாலும்
உனக்கு வலிக்கிறதே !


ஒருவேளை நான் உன்னை
காதலித்திருக்கா விட்டால்
துன்பங்களிலிருந்து தப்பித்திருக்கலாம்
ஆனால் இப்படி
துணாக இல்லாமல்
துரும்பாகவே இருந்திருப்பேன் .
அந்த கடலையோ மழையையோ
குடித்து விடவா
என்ன செய்ய சொல்
நீ கொடுத்த முத்தத்தின் ஈரம் காயும்முன்
எதாவது செய்ய வேண்டும் .
வேர்க்காத முகத்தை கூட
அடிக்கடி துடைத்து கொள்கிறேன் ...
நீ கொடுத்த கைக்குட்டை என்பதால் .
உன்னை காதலிக்க துவங்கியது முதல்
என் அழகு கூடிக்கொண்டே வருகிறது
என்றாலும் ,
எனக்கு அதில் வருத்தம் தான்
எப்போதும் என்னை விட
நீயே அழகாய் இருக்க வேண்டும் .
குறும்பு செய்யும் போதெல்லாம்
நீ செல்லமாய் அடிக்கிறாய்
உன்னிடம் செல்லமாய் அடிவாங்கவே
நான் குறும்புகள் செய்கிறேன் ...

நீ கொடுத்த பரிசொன்றை

வீட்டில் சென்று பிரித்து பார்த்தேன்

அதில் செயற்கை இதயம் ஒன்று

'நான் உன்னை காதலிக்கிறேன் '

'நான் உன்னை காதலிக்கிறேன் ' யன

சொல்லிக்கொண்டே இருக்கிறது ...

நீ மட்டும் தான்

என்னை காதலிக்கிறாய் என நினைத்தேன்

அனால் ,

நீ தரும் பரிசுகள் கூட

என்னை காதலிக்கின்றன .

உன் விரலில் வைத்த மருதாணியை
எடுத்து எறிந்து விட்டு நீயோ
விரலை பார்த்து கொண்டிருக்கிறாய் ...
நானோ,
நீ எடுத்து எறிந்த மருதாணியை
பார்க்கிறேன் ...
உன் விரல் பட்டு அது சிவந்து உள்ளதா என .

ஒட்டு போட்ட கால்சட்டை

வாங்கி வராத
கணக்கு நோட்டிற்காய்
அடிவாங்கிய போதெல்லாம்
அப்பாவை சபித்திருக்கிறேன்

ஒட்டு போட்ட
கால்சட்டயின்
கிழிசலை மறைப்பதிலேயே கழியும்
தோழிகளுடனான எனது நட்பு

பள்ளியற்ற மதியங்களில்
நிம்மதி பெருமூச்சி விடுவேன்
தயிர்சாதம் குறித்த கேலியில் இருந்து
தப்பித்ததாய்

இடை வேளையில்
வெளியே செல்லாமல்
ஏதோ ஒரு புத்தகத்தை
புரட்டி கொண்டிருப்பேன்
நொறுக்குகள் வாங்க காசற்றவனாய்
காட்டிகொள்ளாமல்


ஓடியாடி விளையாடும்
நண்பர்களோடு சேராமல்
ஒதுங்கியே நிற்பேன்
நைந்து போன ஒற்றை சட்டையும்
கிழிந்து விடுமோ என்ற பயத்தில்


எல்லோரையும் போல்
ஆண்டு விடுமுறையை
அவ்வளவாய்
எதிர்ப்பார்க்க மாட்டேன்
ஏதோ ஒரு கடையில்
எடுபிடியை சேர்வதில்
எனக்கு சம்மதமில்லை

இத்தனையும் தாண்டி
தேர்வில்
வெற்றிபெற்று விடுவேன்
அப்பா மேய்க்க
விடுவதாய் சொன்ன
'பன்றி' களுக்கு பயந்தே ...

இதயக் கோளாறு

கூரைல்
கூடு கட்டும்
குருவிகள் கேட்பதில்லை
வீட்டுக்காரனின் சாதியை

சங்கங்கள் ஏதுமற்ற
காக்கைகள் உண்கின்றன
பிடி சோற்றையும்
பங்கிட்டு

கோபுரத்தில் அடங்கி
தேவாலயத்தில் அமர்ந்து
பள்ளிவாசலில் பருக்கை உண்ணும்
புறாக்களுக்குள் எந்த
சண்டையும் இல்லை

கணேசனின் கண்கள்
பீட்டருக்கும்
முருகனின் ரத்தம்
முகமதுக்கும்
பொருந்திய பிறகும்
பொருந்த மறுக்கிறது

சிலரது இதயம் மட்டும் ...

வெளிவராத கவிதைகள்

ஒரு விழா முடித்து
மறு விழா செல்வதற்குள்
கருத்து போகும் நகைகள்
குறித்து
அம்மாவின் கவலை .

எங்கோ சந்தையில்
எதிர்பட்ட
தன் பால்ய சிநேகிதன்
அணிந்து வந்த
ஐவிரல் மோதிரமும் வண்டியும்
அப்பாவின் தூக்கத்தை பறித்தது .

தங்கைக்கு
தலைமுடி உதிர்வது குறித்த
வருத்தம் .

வெளி வராத
என் கவிதைக்காக
நான்தான் வருந்த வேண்டும் ...

பொருளோடு புன்னகைக்கிறது பூமி

இங்கு எல்லாமே
பொருளாலாகி விட்டது

அன்பையும் உறவுகளையும் கூட
பொருள்களே திர்மானிக்கின்றன

பொருளற்ற உயிர்களை
இங்கு எவரும்
பொருட்படுத்துவதில்லை

பொருளோடு உறங்கி
பொருளோடு விழித்து
பொருளோடு புன்னகைக்கிறது பூமி

இங்கு வாழ்க்கை என்பதே பலருக்கு
பொருள் தேடி அலையும் போராட்டம் .

இயற்கை வாசிகள்

அத்தனை சத்தத்திலும்
எப்படியோ உறங்கி விடுகிறார்கள்
சாலை வாசிகள்

எந்த
மென் படுக்கை விரிப்பும்
போர்வையும்
அவர்களின்
தேவையாய் இல்லை

மின் விசிறிகளை நாடாத
அவர்களின் தூக்கம்
மிகவும் எளிதாய் உள்ளது

மழை ,வெயில் யன
வாழ்வின் எந்த கணத்தையும்
மிகச் சாதாரண மாக
எதிர் கொள்கிறார்கள்

எந்த மின்சாரத்தாலும்
துண்டு படுத்த முடிவதே இல்லை...

அவர்களின் கனவை .

உன்னைப் போல் ...

கடைசியாய் நீ தந்த
காதல் கடிதத்தையும்
கிழித்தெறிந்து விட்டேன்

உன் நினைவுகளும்
மெல்ல மெல்ல
இதயத்தை விட்டு
வெளி நடப்பு செய்தன

உன் மிதான என் காதலும்
ஒரு அதிகாலை கனவாய்
நடக்கும் என்ற ஆசையோடு முளைத்து
நடக்காமலே கானலாகி விட்டது

மீண்டும் மீண்டும்
நினைவு கூர்ந்தும்
அதன் பக்கங்களை முழுவதுமாய்
என்னால் வரைய முடிய வில்லை

உன்னை போல
நானும் பழகிகொண்டேன்
வந்தவளிடம் சிரித்து பேசவும்
இரவில் புன்னகையோடு
என்னை பகிர்ந்து கொள்ளவும் .

பொம்மைகளோடு

அன்னையின் முந்தானைப்பற்றி
உறங்கிய என் இரவுகள்
முத்தங்களோடு விடியும் ,

தாத்தாவின் கொஞ்சல்களும்
அத்தைகளின் கேலிகளும்
எனக்கு சிறகுகளை
பூட்டி விடும் ,

மாமாவின் கரம் பற்றி
தெருவில் வலம் வருவேன் ,

குரங்குக்கோ நாய்க்கோ
தரும் முன்னே
எல்லா சோற்றையும்
நானே உண்பேன் ,

பாட்டியின் கதைகளே
எனை தாலாட்டி
உறங்க வைக்கும் .

எல்லாம் ஒரு கனவுப்போல்
ஓடி மறைகிறது
இன்று ,
நகரத்தின் இந்த
நாலு சுவற்றுக்குள் நான் ...

என் குழந்தை விளையாடுகிறான்
பொம்மைகளோடு ...

நகரத்தின் கதவுகள்

எப்போதும் சாத்தியே கிடக்கிறது

நகரத்தின் கதவுகள்

செய்தி தாளுக்கோ பால் பாக்கெட்டுக்கோ

திறக்கப்படும் அவை

சட்டென அறைந்து சாத்தப் படுகிறது

எவர் முகத்திலாவது .

சக்கரை அரிசி என

உறவை எடுத்து செல்லும்

டம்பளர்கள் இங்கு

எவரிடமும் இல்லை .

தொலைகாட்சி சிறப்பு

நிகழ்ச்சிகளால் மட்டுமே

அடையாளப்படுகிறது ,

இனிப்பை பரி மாரிக்கொல்லாத

இவர்களின் பண்டிகைகள் ...

எப்போதாவது ஒலிக்கும் அழைப்புமணி

கடிதங்களுடனோ எரிவாயு வுருளையுடனோ

உறவு தவிர்த்த எதனுடனும்

காத்து நிற்கிறது ....

கூப்பிட்ட குரலுக்கு

ஊர் கூடிய தெருக்களில்

கான்கிரிட் சுவர்கள் முளைத்து

சிறையாகிவிட்டன இதயங்கள்

நகரத்தின் கதவுகளுக்குள் .

உன்னை காதலிக்க துவங்கிய பிறகு
பொய் பேச கூடாதென்றால்
பொய் பேசாமல்
எப்படித்தான் காதலிப்பது ...

நான்,

அதிகம் சுற்றுகிற கோவிலாகவும்

அதிகம் வேண்டுகிற தெய்வமாகவும்

இருக்க முடிகிற உன்னால்

ஏன் வரங்களை மட்டும்

தாரளமாய் தரமுடிவதில்லை ....

உன்னை முதலில் பார்த்தபோது

சிற்பம் என நினைத்தேன்...

பின்புதான் தெரிந்தது

நீ சிற்பமல்ல சிற்பி ,

எனை ஒவ்வொருநாளும் செதுக்குகிறாய்...

பிப்ரவரி பதினான்கு
காதலர் தினமாம் ...
அன்று தானே உன்னை
முதலில் கண்டேன்
அதற்குள் யார் அறிவித்தது
அதை காதலர் தினமென்று ...

எதையும் எதிர்ப்பார்த்து
நான் உன்னை காதலிக்கவில்லை
என்றாலும்
நான் எதிர் பார்ப்பதெல்லாம்
எப்போதும் உன் காதலை தான் .

எனை ஒவ்வொரு நாளும் செதுக்குகிறாய்..என்னும் என் முதல் தொகுப்பில் வெளியான கவிதைகள சில...

எத்தனையோ பெண்கள்
அழகாய் இருக்கலாம்
ஆனால் நீதான் என்னை
அழகாக்கியவள்.

என்னால் சொல்லமுடியாத
எவ்வளவோ காதலை நீ
சாதாரணமாய் சொல்லி விடுகிறாய் ...
உன் ஒரு பார்வையில்.

திசை மறந்த ஒரு பட்டாம்பூட்சியாய்
திசை எட்டும் முட்டுகிறேன்
எனக்கான கதவை திறக்க போகும் கைகள்
எவர் கைகளோ ...